வெஜ் புலாவ்…

by Editor News

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 1 கப்

உருளைக்கிழங்கு – 2

கேரட் – 2

பீன்ஸ் – 50 கிராம்

பச்சைப் பட்டாணி – 1/2 கப்

பெரிய வெங்காயம் – 1

பழுத்த தக்காளி – 1

பச்சை மிளகாய் – 5

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

இலவங்கப்பட்டை – 1

கிராம்பு – 3

ஏலக்காய் – 3

பிரிஞ்சி இலை – 1

எண்ணெய் – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் பாசுமதி அரிசியை இரண்டு மூன்று முறை நன்றாக அலசி சுமார் 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.

தற்போது அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து தேவைக்கேற்ப எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் அதில் பிரிஞ்சி இலை, சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளவும்.

பிறகு அதனுடன் நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.

தற்போது இதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி மற்றும் சிறிதளவு உப்பு போன்றவற்றை சேர்த்து கலந்து ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பிறகு அதில் ஒரு டம்ளர் அளவு பாசுமதி அரிசிக்கு 1 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

அடுத்து அதனுடன் ஊற வைத்த பாசுமதி அரிசியை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

தற்போது தேவையென்றால் உப்பு சேர்த்து தண்ணீர் 80% வற்றியவுடன் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.

பிரஷர் தானாக அடங்கியவுடன் குக்கரை திறந்தால் மிதமான மசாலாவோடு, கமகம வாசத்தோடு ஒயிட் வெஜ் புலாவ் உதிரி உதிரியாக பரிமாற தயாராக இருக்கும்.

Related Posts

Leave a Comment