2,668 அடி உயர மலை உச்சியில் 11 நாட்கள் பிரகாசித்த மகா தீபம் நிறைவு

by Editor News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களும் பஞ்சமூர்த்திகள் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கடந்த மாதம் 26-ம்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியின் மீது மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டு வந்தது. குறிப்பாக இந்த வருடம் தொடர்மழையிலும், கடுங்குளிரிலும் மகாதீபம் மலை உச்சி மீது தொடர்ந்து எரிந்து கொண்டு வந்தது. இந்த நிலையில் நிறைவு நாளான நேற்று மாலை மகாதீபம் 2,668 அடி உயரமுள்ள மலை மீது ஏற்றப்பட்டது.

நிறைவுநாள் என்பதால் ஆன்மீக பக்தர்கள் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றி மலையின் மீது ஜோதிப் பிழம்பாய் காட்சி கொடுத்த அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். நகரி வாத்தியமும் சங்கொலி முழங்கவும் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கங்கள் எழுப்பி ஜோதி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இன்று காலை (07.12.23) மலைமீது இருந்து கோயிலுக்கு மகா தீப கொப்பரை கீழே வர வைக்கப்பட்டு பின்பு நாளை மாலை கொப்பரைக்கு பூஜை செய்து அதன் மீது இருக்கும் தீபமை வருகின்ற 27ஆம் தேதி நடக்க போகும் ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜப்பெருமானுக்கு சாற்றப்படும். அதன் பிறகு ஆன்மீக பக்தர்களுக்கும் நெய் காணிக்கை செலுத்தியவர்களுக்கும் அந்த தீபத்தின் மை பிரசாதமாக விநியோகிக்கப்படும்.

Related Posts

Leave a Comment