“ஜூன் மாதத்தில் கொரோனா 4ஆம் அலை..” : எச்சரிக்கை விடுக்கும் மாவட்ட ஆட்சியர்!!

by Editor News

கொரோனா 4ஆம் அலை ஜூன் மாதத்தில் வரலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 480 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 48 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 2 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,002 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திருச்சி பெரிய மிளகுபாறை நகர்புற சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான்காவது அலை ஜூன் மாதம் வரலாம் என்றும் ஆகஸ்ட் இறுதியில் தீவிரமாகும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே கொரோனா 4ஆம் அலை எவ்வளவு விரைவாக வேண்டுமானாலும் வரலாம். 3ஆம் அலையின் போது, தடுப்பூசி போட்டுக் கொண்டு, முகக் கவசம் அணிவது ஆகியவற்றைப் பின்பற்றி பாதிப்புகளை குறைந்தது போல தொடர்ந்து கடைப்பிடித்தால் 4ஆம் அலையிலும் பாதிப்புகளை குறைக்கலாம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ” திருச்சி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சத்து 35 ஆயிரத்து 146 பேருக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தப்பட உள்ளது . இந்த முகாம்களை பொதுமக்கள், தாய்மார்கள் பயன்படுத்தி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்றார்.

Related Posts

Leave a Comment